“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? - அண்ணா நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்

By காமதேனு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவுசெய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பிப்ரவரி 5-ல் நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்த அறிக்கையை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்” என்று எழுதியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நோக்கில், #StandForStateRights எனும் ஹேஷ்டேகுடன் இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை 4 மாதங்கள் வைத்திருந்து, மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. ட்விட்டரில் #GetOutRavi எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE