“ஆசிரியர்கள் கண்டித்தால்தான் மாணவர்களை நெறிப்படுத்த முடியும்” - தருமபுரம் ஆதீனம் 

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் சரபர் தலமான கம்பகரேஸ்வரர் கோயிலில் ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கம்பகரேஸ்வரர், தர்ம சம்வர்த்தினி, சரபருக்கு உலக நலன் வேண்டி சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து, உற்சவர் சரபர் முன் மண்டபம் எழுந்தருள சகஸ்ரநாம அர்ச்சனையுடன் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற, தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மோடி 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்று இருப்பது பாராட்டுக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆன்மீக சம்பந்தமாக பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது சிறப்புக்குரியது. மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளிகளில் சமய கல்வியை அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு நீதி போதனை கல்வி ஏற்கெனவே இருந்தது போல் தொடர்ந்து இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால்தான் பண்பாட்டோடு கூடிய கல்வியை மாணவர்கள் பெற முடியும். ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை செயல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதற்கும், கேட்பதற்குரிய உரிமை கொடுத்தால்தான் மாணவர்களை நல்ல முறையில் நெறிப்படுத்த முடியும்.

அன்று ஆசிரியர்கள் பண்பாட்டை போதிக்கின்றவர்களாக, அந்த தரத்தோடு இருந்தார்கள். அதே நிலை மீண்டும் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நமது நாட்டின் வரலாறுகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். இப்போது சமூக அறிவியல் பாடத்தில் நமது நாட்டினுடைய பண்பாட்டை பெருமைப்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் பாடங்களை நெறிப்படுத்த வேண்டும்.

அதேபோல், அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு அவசியம் என்பதை செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். பண்புடைய கல்வியை கற்க வைப்பதற்கு தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோன்று சிறப்பிடம் பெரும் மாணவர்களை கவுரவிப்பதும், அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் போன்றவைகளை எல்லாம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது” இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் திருபுவனம் கிளை மடத்தில் தருமை ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானத்தை சந்தித்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு வாழ்க்கை முறை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE