சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவுசெய்ய அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், பிப்ரவரி 5-ல் நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு 2021 செப்டம்பர் 13-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க, அந்தச் சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பாததால், அதை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அந்தச் சட்டமுன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. இந்நிலையில், அந்தச் சட்டமுன்வடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பிப்ரவரி 1-ம் தேதி சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியதாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும், அந்தச் சட்டமுன்வடிவு ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், நீட் தேர்வானது சமூகநீதியைப் பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்புவதற்கான கோப்பு, பிப்ரவரி 1-ல் ஆளுநரால் கையெழுத்திடப்பட்டு, பிப்ரவரி 2-ம் தேதி மாலை தமிழக அரசால் பெறப்பட்டது. ஆளுநரின் கடிதம் உடனடியாக சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு இன்று தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், “நீட் தேர்வு நமது மாணவர்களைப் பாதித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றைக் களையக்கூடிய வகையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு கோரும் முன்முடிவு நமது சட்டமன்றத்தில் 2021 செப்டம்பர் 13-ல் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்தச் சட்டமுன்வடிவு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துகள், தமிழக மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல” என்று அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதன் அடுத்தகட்டமாக, ஆளுநர் தெரிவித்த கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, அந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாகக் கூறியிருக்கும் முதல்வர், இதுகுறித்து விவாதித்து முடிவுசெய்ய, பிப்ரவரி 5-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடிவுசெய்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.