மதுரை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், இன்றும் நடைபெற்றது. இன்று மட்டும் சுமார் 300-க்கும் அதிகமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்களில் பலர் மக்களையும், ஊடகங்களையும் கவர்வதற்காக வித்தியாசமான ஆடை, அணிகலன்களுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மதுமிதா, கண்ணகி போல கையில் சிலம்பு ஏந்தியபடி வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளர் பாரதி கண்ணம்மா, மீனாட்சி அம்மன் போல வேடமணிந்து வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர் ராஜா, எம்ஜிஆர் போல தொப்பி, கருப்புக் கண்ணாடி அணிந்துவந்தார். திமுக வேட்பாளர் போஸ் முத்தையா, தன்னுடைய அண்ணன் எஸ்ஸார் கோபி, தாய் காளியம்மாள் ஆகியோருடன் வந்து வேட்புமனு செய்ததுடன், தாயில்லாமல் நானில்லை என்று சென்ட்டிமென்ட்டாகப் பேசினார். நாளையும் வேட்புமனுத் தாக்கல் தொடர்கிறது.