தேர்தலில் களமிறங்கும் இளம் பட்டதாரி வேட்பாளர்கள்!

By காமதேனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளம் பட்டதாரிகள் மற்றும் திருநங்கைகள் போட்டியிடுகின்றனர். திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள்தான் இந்த வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில், தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களின் பட்டியலையும் திமுக, அதிமுக வெளியிட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இளம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இதில் திமுக ஒருபடி உயர்ந்து திருநங்கைகளையும் களத்தில் இறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியும் கூலித் தொழிலாளர்களையும் தேர்தலில் களம் காணவைத்துள்ளது.

திமுக வேட்பாளர் 22 வயதான ரிஷி

அந்த வகையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் திமுக வேட்பாளராக 22 வயதான ரிஷி என்ற பட்டதாரி இளைஞர் போட்டியிடுகிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை மாநகராட்சி 14வது வார்டில் 22 வயது செவிலியர் இலக்கியா போட்டியிடுகிறார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக சார்பில் 49 வயது திருநங்கை கங்கா போட்டியிடுகிறார். கோவை மாநகராட்சி 74வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளி சரவணகுரு போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மதுரை பாண்டி கோயிலில் கிடா வெட்டி வழிபாடு மேற்கொண்டனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலை சந்திக்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE