சிறந்த பத்திரிகையாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது!- தேர்வு குழுவை அமைத்தது தமிழக அரசு

By காமதேனு

சிறந்த இதழியலாருக்கான கலைஞர் எழுதுகோல் விருதாளரை தேர்வு செய்ய குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

2021-22ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், கடந்த 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், "இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும் "கலைஞர் எழுதுகோல் விருது" மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்புபடி, இந்த விருதுக்கான தகுதிகள் மற்றும் வரைமுறைகள் வகுத்தும், ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் பிறந்த தினமான ஜுன் 3ம் தேதியன்று இவ்விருது வழங்கப்படும் எனவும், விருதாளருககு விருதுக் தொகையான ரூ.5 லட்சத்துடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டது.

அதன்படி, கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதாளரை தேர்வு செய்ய குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. தலைவராக பேராசிரியர் அருணன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலராக மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநரும். உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், முனைவர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் படைப்பாளர் முனைவர் ரெ.மல்லிகா (எ) அரங்க மல்லிகா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக்குழு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE