ரூ.3 கோடி பண மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் முன் ராஜேந்திர பாலாஜி ஆஜர்!

By காமதேனு

ரூ.3 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார்.

ஆவின் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதனிடையே, ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் கடந்த 5ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, மோசடி வழக்கில் ஆஜராக விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று குற்றப்பிரிவு போலீசார் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE