பள்ளிகள் திறப்பதில் அவசரம் ஏன்? -விஜயகாந்த்

By காமதேனு

“தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை நியோகோவ் வைரஸ் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகமும் வரவேற்கிறது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக அரசு ரத்துசெய்ததோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலணை செய்ய வேண்டும். பொது தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE