திமுக அரசின் குறுவை தொகுப்பு அறிவிப்பு டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்காது: இபிஎஸ் விமர்சனம்

By KU BUREAU

சென்னை: திமுக அரசின் குறுவைத் தொகுப்பு அறிவிப்பு, காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் 2023 - 24 ஆண்டுக்கான பங்கு நீரை வாதாடி பெற இயலாத திமுக அரசு, இந்த ஆண்டான (2024-25) மே மற்றும் ஜூன் மாதத்தில் நமக்கு வரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கான எவ்வித முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா அரசில், குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை ஏற்பட்டபோது, குறுவைசிறப்பு தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தத் தேவையான பிளாஸ்டிக் பைப்போன்ற உபகரணங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டன. ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மூலம் சமூக நாற்றங்கால் முறையில் அரசு உதவியோடு நாற்றங்கால் வளர்க்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு பிறகு தண்ணீர் கிடைக்கும்போது விவசாயிகள் பிரச்சினையின்றி நெல் பயிர் செய்வதற்கு மானிய விலையில் நாற்றங்கால் வழங்கப்பட்டன.

தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும். ஜூன் 14-ம்தேதி திமுக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசனத்துக்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த விதை நெல்லை வாங்கி எங்கேநாற்றங்கால் தயார் செய்வார்கள் என்ற அடிப்படை யோசனை கூட திமுக அரசுக்கு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடும் செய்யவில்லை. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்வது பற்றி எந்தவிதமான முன்னெடுப்பும் இல்லை.

கர்நாடகத்திடம் இருந்து நீரை பெற தவறிய தங்களது குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான் திமுக அரசின் இந்த குறுவைத் தொகுப்பு அறிவிப்பு.

இன்றைய அளவில், டெல்டா விவசாயிகளின் தேவை என்ன என்பதை கண்டுகொள்ளாமல், அவசர கோலத்தில் இந்த குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ரூ.78.67 கோடியில், ரூ.24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம்யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது.

இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது. அவர்களின் துயரத்தைப் போக்கவும் முடியாது. இதுவும் திமுக அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE