தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநாள் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,930 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 1,145 எம்.பி.பி.எஸ். மற்றும் 635 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு சேரும் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டிற்கு 24,949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 14,913 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்றுள்ளனர். 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநாள் கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலில் 1,806 பேர் உள்ளனர். விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 30ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. கரோனா சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.