ரம்மி விளையாட கடன்.. டார்ச்சர் கொடுத்த கடனாளி... மகனை விற்ற தந்தை

By காமதேனு

கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்றவரை கடன் கொடுத்தவர் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனைவியிடம் கெஞ்சி கடனை அடைக்க பெற்ற மகனையே கடனாளியிடம் விற்றுள்ளார் கொடூர தந்தை. இந்த அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், உறையூர் அருகேயுள்ள தேவர் காலனியை சேர்ந்த அப்துல்சலாம்- கைருன்னிஷா தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான கைருன்னிஷாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சரிவர வேலைக்கு செல்லாத அப்துல்சலாம், கையில் கிடைக்கும் பணத்துடன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

மேலும், நண்பர்களிடமும், வீட்டின் அருகில் உள்ளவர்களிடமும் கடன் வாங்கி ரம்மி விளையாடி வந்துள்ளார் அப்துல்சலாம். இந்நிலையில், கடன் கொடுத்த தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் நெருக்கடி கொடுக்க, தலைமறைவாக இருந்துள்ளார் அப்துல்சலாம். இதனிடையே, அப்துல்சலாம், ஆரோக்கியராஜிடம், "உன்னுடைய குழந்தையை கொடுத்துவிடு. கூடுதலாக பணம் தருகிறேன்" என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து, தனது மனைவியிடம் அப்துல்சலாம் கூற, அவரும் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 19ம் தேதி ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் விற்றுவிட்டனர். அந்த குழந்தையை கூடுதல் விலைக்கு விற்றுவிட்டார் ஆரோக்கியராஜ். இதனிடையே, குழந்தையை மறக்க முடியாமல் கைருன்னிஷா தவித்துள்ளார். குழந்தையை வாங்கி வரும்படி கணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் கணவர் மறுத்துள்ளார். இதையடுத்து, உறையூர் போலீஸாரிடம் கைருன்னிஷா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆரோக்கியராஜ், உடந்தையாக இருந்த அவரது உறவினரை கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தையை தாய் கைருன்னிஷாவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். வாங்கிய கடனுக்காக பெற்ற குழந்தையை தந்தை விற்ற சம்பவம் உறையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE