நடிகர் சித்தார்த் மீது இரு புகார்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற சம்மன் அனுப்பி இருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் தொகுப்பாளர் குறித்து. நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த் மீது, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரைத்தது.
இதற்கிடையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரினார். இருப்பினும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த் மீது 2 புகார்கள் வந்துள்ளதாகவும், ஏற்கெனவே ஹைதராபாத் போலீஸார், சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட புகாரில் நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
பெண் தொகுப்பாளர் குறித்த அவதூறு கருத்துப் புகாரில் சட்ட நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையின்படி, குற்றப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், இதனால் இரு புகார்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக அவர் கூறினார். கரோனா காலம் என்பதால் நடிகர் சித்தார்த்திடம் எந்த முறையில் விசாரணை நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.