ரூ.150 கோடி கடனால் தி.நகர் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி!

By காமதேனு

ரூ.150 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி.நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள சரவணா தங்க மாளிகை ஆகிய இரண்டு இடங்கள் மூலம் இந்தியன் வங்கியில் ரூ.150 கோடி கடன் பெற்றுள்ளனர். கடன் பெற்றதற்கான நிலுவை தொகையை ஏற்கெனவே சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாகிகள் இந்தியன் வங்கிக்கு கட்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து ஏற்கெனவே வங்கியில் நிலுவை தொகை கட்டாததால் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு நீதிமன்றத்தில் அட்வகேட் கமிஷனர் உத்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கடந்த 2019ம் ஆண்டு வங்கி தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 15ல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடமானமாக வைத்து கடன் பெற்ற இடத்தை சீல் வைத்து 60 நாட்களில் வங்கியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரைம் சரவணா ஸ்டோர்ஸ்

அதன் அடிப்படையில் கடை நிர்வாகிகளுக்கு உரிய முன்னறிவிப்புகள் கொடுக்கப்பட்டன. இதற்கு கடை நிர்வாகம் எந்தவித பதிலும் அளிக்காததால் 15 நாட்கள் கழித்து இன்று போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் வரை இதற்கான அவகாசம் கொடுத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவகாசம் கொடுத்ததிற்கு பிறகும் கடனை கட்டாத காரணத்தால் தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த 2 கடைகளுக்கும் சீல் வைப்பதற்கான நடவடிக்கையை இந்தியன் வங்கி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அதேபோன்று இன்று வரை கடையில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் கடையில் உள்ள பொருட்களை எடுக்காததால் சீல் வைக்கப்பட்டது. இன்று கடைக்கு வந்துள்ள ஊழியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE