கன்னியாகுமரி மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகை 5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும்வகையில், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என சொன்னது என்னாச்சு? என பாஜகவினரிடம் திருப்பிக் கேட்டு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தமிழக அரசுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. இப்போது, திமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. இருந்தும் 21 பொருட்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு வழங்கிய புளியில் பல்லி இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில்தான், இதை அப்படியே அரசியலாக்கி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர், ’பொங்கல் பரிசு ரூபாய் 5,000 எங்கே?’ என போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர்.
இப்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாகர்கோவில் மாநகர திமுக சார்பில், ‘ஒன்றிய பாஜக அரசே... தேர்தலின்போது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் எனச் சொன்னது என்னாச்சு?’ என போஸ்டர் ஒட்டியுள்ளனர். தொடர்ந்து இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கேட்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பொன்.ராதாகிருஷ்ணன் முன்னெடுத்த ‘ஜூலை போராட்டம் என்னாச்சு?’ என்பது உட்பட பல்வேறு போஸ்டர்களும் ஒட்டப்பட இருப்பதாக திமுகவினர் பகீர் கிளப்புகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் பாஜக, திமுகவின் இந்த போஸ்டர் யுத்தம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.