நியாயவிலைக் கடைகளில், இன்றுமுதல் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் வாழ்த்துகள் என்று அச்சிடப்பட்ட துணிப்பையில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்கள் போடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
நியாயவிலைக் கடைகளில், டோக்கன் அடிப்படையில் நாளொன்றுக்கு, 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. காலை 9 முதல் மாலை 6 மணிவரை இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிவரை பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் இன்றுமுதல் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்கள் அதையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பொங்கல் சிறப்புத் தொகுப்பு இதுவரை 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.