குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கில் 4 பிரிவுகள் ரத்து

By கி.மகாராஜன்

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கில் 4 பிரிவுகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டோன்சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை அருமனை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

“மக்கள் நிலத்தை பூமித்தாயாக வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டததில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மனுதாரர் பேசிய கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தால் கரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அவர் பேசவில்லை. எனவே, மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டப்பிரிவு 3-ன்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது.

சமீபத்தில் பால்ஜான்சன் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தைப் படித்தபோது, அதில் ஒரு நம்பிக்கையாளரின் சுய வாழ்க்கை வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு நான் இயேசு கிறிஸ்து மீது அளவற்ற அன்பு உள்ளவனாக மாறினேன். அதில் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருரையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் அன்பு, நேசம் என்பது கடவுளிடம் இருந்து வருகிறது. யார் நேசிக்கிறார்களோ அவர்கள் கடவுளுக்குப் பிறந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்பு தலைவர் டெஸ்மவுண்ட் டுடுவை இழந்து வாடியது. அதுகுறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை, மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், கிறிஸ்துவத்துக்கு எதிரான செயல்களை;ச செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் எனக் கருதுகிறேன்” இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE