ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்ப சத்திரத்தில் ஆளுநர் அஞ்சலி

By ஆர்.டி.சிவசங்கர்

முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்ப சத்திரம் பகுதியில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில், கடந்த டிசம்பரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரும் உயிரிழந்தனர்.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், அந்தப் பகுதியிலிருந்து ராணுவத்தின் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டப் பின்னர், சுற்றுலாப் பயணிகள் விபத்து ஏற்பட்ட இடத்தில் நாள்தோறும் வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

இந்நிலையில், தனிப்பட்ட முறையில் உதகை வந்த தமிழக ஆளுநர், உதகையிலிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் நஞ்சப்ப சத்திரம் வந்தார். ஆளுநர் வருகையையொட்டி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆளுநரிடம் விபத்து குறித்து விவரிக்கும் காவல் துறையினர்

மாலை சுமார் 4.30 மணி அளவில் ஆளுநர், மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் புகைப்படங்கள் மற்றும் உயிரிழந்த 12 வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்பு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் ஆகியோரிடம் விபத்துக் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அங்கிருந்து உதகை ராஜ்பவனுக்கு புறப்பட்டார். நாளை காலை அவர் உதகையிலிருந்து சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE