பிரேமலதா மீதான வழக்கு ரத்து

By கி.மகாராஜன்

“ஓட்டுக்கு பணம் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்க வேண்டும்” என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீது தொடரப்பட்டிருந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது நெல்லையில் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, வாக்காளர்களை வாக்களிக்க பணம் வாங்குமாறு தூண்டிதாக அவர் மீது நெல்லை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பிரேமலதா சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் வாங்க வேண்டும் என மக்கள் மத்தியில் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், “மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அவ்வாறு பேசவில்லை. பணத்தின் வலிமையைக் காட்டும் விதமாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE