நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் உட்பட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்களில் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி 10 நாட்களில் லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
தடுப்பு நடவடிக்கையாக உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தியோர் அதற்கான சான்றிதழ் நகலை காட்டிவிட்டுச் சென்றனர். சிலர் செல்போனில் வைத்திருந்த சான்றிதழைக் காட்டினார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியாகாமல் இருப்பவர்களும், 2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் 2-வது தடுப்பூசி செலுத்தாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அத்துடன் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
அதுபோன்று ஊட்டியிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடாமல் வரும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து, அருகே உள்ள மையங்களில் செலுத்தப்படுகிறது. அதேபோல் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தடுப்பூசிச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.