சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 236-வது பிறந்த நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மதிமுகவினரும், அங்கிருந்த சமூக அமைப்பினரும் துரை வைகோவையும், கட்டபொம்மனையும் வாழ்த்தி கோஷமிட்டனர். சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தியாகம், வீரத்தால் நீங்காத புகழை பெற்றவர், விடுதலை விதையை முதலில் விதைத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்கள் சேர்ந்து பாஜக தோற்கடிப்போம் என்று ஆ.ராசாவின் கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது என்கிறாரே என்ற பாஜக தலைவர் அண்ணாமலை பதில் சொல்லியிருக்கிறாரே?
இதை அவரோ நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
உள்ளாட்சித்தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களைக் கேட்டுப்பெறும்?
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளோம். ஒமைக்ரான் பரவலால் தேர்தல் தள்ளி போகலாம். எப்போது, வந்தாலும், கூட்டணி தலைமையிடம் பேசி தேர்தலைச் சந்திப்போம்.
தமிழக எம்பி-க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்ததுள்ளது குறித்து உங்கள் கருத்து?
தேசிய பேரிடர் பாதிப்புக்கென 6 மாநிலங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு முதல்வர் ரூ.6 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் பேரிழவு நடந்துள்ளது. இதற்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக எம்பி-க்கள் கொண்ட பாராளுமன்ற குழு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டும் உடனே ஒதுக்கவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான முறையில் தேவையான நிதியை ஒதுக்க வேண்டு மே தவிர, பாஜக ஆளும் மாநிலங்களுக்கென தனிப்பட்ட எண்ணம், பாரபட்சம் இருக்கக்கூடாது.
முன்பு மோடி தமிழகம் வந்தபோது 'கோ பேக் மோடி’ என்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய மதிமுக, இந்தமுறையும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டுமா?
இந்திய பிரதமராக தமிழகத்திற்கு வரும்போது, மோடியை வரவேற்கிறோம். தமிழகத்திற்கான திட்டம், நிதியை மறுத்தால் எதிர்ப்போம். தமிழகத்தை மாற்றான் தாய் போன்று மத்திய அரசு பார்க்கக்கூடாது.
இவ்வாறு துரை வைகோ பேட்டியளித்தார்.