சென்னை, சைதாப்பேட்டையில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“கரோனா 2-வது அலையை நாம் எப்படித் தீவிர நடவடிக்கைகளை எடுத்து அதனுடைய வீரியத்தைக் குறைத்து மக்களுக்கு பாதிப்பையும் குறைத்து, தொற்றிலிருந்து மக்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வந்தது. மாநிலத்தின் பொருளாதாரமும் மீட்சிப் பாதையில் நடந்தோம். ஆனால் இப்போது ஒமைக்ரான் என்னும் புதிய தொற்று அச்சுறுத்தலோடு மிரட்டத் தொடங்கியிருக்கிறது..
நேற்று காலையில் 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் “Recovery with headwinds” எனத் தலைப்புச் செய்தியாக, முழுப்பக்க கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ‘2 கரோனா அலைகளைச் சமாளித்தும், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மீட்சிப்பாதையில் இருந்து முன்னேறி, நல்ல நிலைக்கு வரத்தொடங்கின. ஆனால், ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்த காரணத்தால், வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த நம் பயணத்துக்கு சிறிது தடை ஏற்படும்’ என்ற சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது.
அதேபோல மற்றொரு ஆங்கில நாளிதழில், ‘தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையில் 46 விழுக்காடு பேர் சென்னையில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக்கொண்டே போகிறது’ என்கிறது அந்தச் செய்தி.
இந்த 2 செய்திகளையும் நான் குறிப்பிட்டுச் சொல்வதற்கு காரணம், மக்களை பயமுறுத்த அல்ல. மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன்.
ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொன்னபோது, ஒமைக்ரான் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தேன். ஏனென்றால், இதில் பரவல் வேகம் அதிகம். நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிக்கக்கூடும். ஆனால், இதைத் தடுப்பதற்காக நமக்கு முன்னால் இருக்கக்கூடிய கேடயம் முகக்கவசம்தான்.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, பொது இடங்களில் நீங்கள் செல்கின்ற போது, கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது, நிச்சயமாக முகக்கவசத்தை அணிந்தே தீர வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தாக வேண்டும்.
ஒமைக்ரான் வைரஸ் உருமாறி இருந்தாலும், நம் நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நல்ல நோய்த் தடுப்பைத் தொடர்ந்து அளிக்கின்றன. தடுப்பூசியால் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியால் புதிய வைரஸ் தாக்கினால் கூட, அந்த நோயின் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். அதோடு, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இறப்பு விகிதமும் மிக மிகக் குறைவு என்பதைத்தான் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய நாடுகளிலேயே புதிய வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லை என்றாலும், இப்போது நோய்த் தொற்று கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
ஆகவேதான், நமது அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஒரு இயக்கமாக மாற்றியிருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் இயக்கத்தில் இணைந்து, கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 60 வயதுக்கு மேற்பட்டோர், இன்னும் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நிச்சயம் 3 டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்று நான் உங்களை அன்புடன், பணிவோடு, உரிமையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
‘தடுப்பூசி போட்டுக் கொள்வோம், புதிய வைரஸ் தாக்கத்தைத் தடுத்து நிறுத்துவோம்’ என்ற உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். வரக்கூடிய காலகட்டத்தில் இந்தத் தொற்றிலிருந்து விடுபட்டிருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும்.
அரசு நினைத்தால் அதை வெற்றிபெற வைத்துவிட முடியாது. ஒரு கையால் தட்டமுடியாது, இரண்டு கைகளால்தான் தட்டமுடியும். ஆகவே, நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‘’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.