சென்னையில் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறியதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று(டிச.31) இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னை முழுவதும் 499 சோதனைச் சாவடிகள் அமைத்து 13 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகரில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
நேற்று இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற 3 விபத்துகளில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.