ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மேலும் 3 புகார்கள்

By காமதேனு

தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக புகார் அளிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக புகார்கள் பதிவாயின. அதனையடுத்து, தமிழக போலீஸார் தனிப்படைகள் அமைத்து அண்டை மாநிலங்கள் வரை தேடி சலித்து வருகின்றனர். நிலம், நீர், ஆகாயம் என சகல மார்க்கங்களிலும் வலைவீசி தேடி வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜி வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகளை கண்காணிப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், வெளிநாடுகளுக்கு பறந்து தப்பிப்பதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. தனிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விருதுநகர் எஸ்பி அலுவலகத்துக்கு நேரிலும் ஆன்லைனிலும் புகார்கள் குவிந்து வருகின்றன. இன்றைய கணக்கில் மேலும் 3 புகார்கள் வந்துள்ளன. வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து தலா ரூ7 லட்சம் ஏமாற்றியதாக இந்த 3 புகார்தாரர்களும் தெரிவித்துள்ளனர். இவை குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் பல ரகசிய வேலைகளை தொடங்கியுள்ளனர். வாகனங்களில் மாறி வலம் வருவதன் மூலமே ராஜேந்திர பாலாஜி தப்பி வருவதாக கண்டறிந்துள்ளனர். அதற்கொப்ப நடவடிக்கைகளிலும் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருந்தபடி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ராஜேந்திர பாலாஜி. மேலும் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE