மதுரை, மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, மாரிதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், முப்படைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாக, மதுரை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதற்கிடையே, தனியார் டிவி நிறுவனம் அனுப்பியதுபோல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரிலும், கரோனா முதல் அலை பரவலின்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (டிச. 21) விசாரணைக்கு வந்தது.
மாரிதாஸ் தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மனு தொடர்பாக மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச.23-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.