எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

By KU BUREAU

சென்னை: இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும்ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசால் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், தமிழக அரசின்2024-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு இலக்கியத்தின் மூலமாக ஆதிதிராவிட மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகரைச் சேர்ந்த ஃபாஸ்டினா சூசைராஜ் என்ற பாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாமா எழுதிய ‘கருக்கு’, ‘சங்கதி’, ‘வன்மம்’, ‘மனுசி’ போன்ற நாவல்களும், ‘குசும்புக்காரன்’, ‘கொண்டாட்டம்’, ‘ஒரு தாத்தாவும் எருமையும்’ போன்ற சிறுகதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 2000-ம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றுள்ளது..

‘கருக்கு’ புதினமானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும், ‘வன்மம்’ என்ற புதினம் ஆங்கிலம், தெலுங்குமற்றும் கன்னட மொழிகளிலும், ‘சங்கதி’ என்ற புதினம் பிரெஞ்சு,ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும், ‘குசும்புக்காரன்’, ‘ஒரு தாத்தாவும் எருமையும்’ போன்ற சிறுகதை தொகுப்புகளிலிருந்து சில கதைகள் ஆங்கிலம், ஹிந்தி,உருது, கன்னடம், குஜராத்தியிலும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ‘அவ்வையார்’ விருதை பாமாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE