கடலூரில் சாலையில் சென்ற காரில் திடீரென பற்றிய தீ - மூவர் உயிர் தப்பினர்

By ந.முருகவேல்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த மூவர் உயிர் தப்பினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (52). இவர் இறஞ்சி கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி அஞ்சலை மற்றும் கார் ஓட்டுநர் சாமிநாதன் ஆகிய மூன்று பேரும் இன்று மதியம் இறஞ்சியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது உறவினர் ஊரான காஞ்சிராங்குளம் கிராமத்தில் வளையகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது வேப்பூர் கூட்ரோட்டில் காரை நிறுத்திவிட்டு வளையகாப்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்கள் வாங்கும் போது திடீரென்று கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் பற்றிய தீயை அணைத்தனர். விபத்தில் கார் எரிந்து சேதம் அடைந்தது. ஓட்டிய வாகனத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE