தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் இடமாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

By KU BUREAU

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காவலர்கள் முதல் டிஜிபிக்கள் வரை பல்வேறு படிநிலைகளில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணி செய்து வந்த போலீஸாரும் பணியிட மாற்றத்துக்கு ஆளாகினர்.

தேர்தலை முன்னிட்டு மட்டுமே இது போன்ற பணியிட மாற்றம் நடைபெற்று இருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்தவர்கள் சென்னைக்கும், சென்னையில் இருந்தவர்கள் ஆவடி, தாம்பரம், மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர், திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தனர். வேறு இடங்களில் பணி செய்தவர்களை புதிய இடங்களில் பணியமர்த்தியதால் சட்டம் ஒழுங்கை திறம்பட கையாள்வதில் சுணக்கம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், காவல் துறையை சேர்ந்தவர்களும் தங்களது குடும்பத்தை ஒரு இடத்தில் விட்டுவிட்டு மற்றொரு இடங்களில் பணியமர்த்தப்பட்டதால் அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாளவும், காவலர்களின் நலன்களை காக்கும் வகையிலும் தற்போது காவல் துறையினரை பணியிட மாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்த காரணத்தால் டிஜிபி மற்றும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டிய போலீஸாரின் பட்டியலை சேகரித்து வருகின்றனர். இதற்காக போலீஸாரின் விருப்பங்களும் மனுக்களாக பெறப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக காவலர் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 1,016 போலீஸார் தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளனர். மேலும், காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸாருக்கான பணியிட மாற்ற பட்டியலை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட உள்ளார்.

குறிப்பாக இன்ஸ்பெக்டர்கள் முதல் டிஜிபிகள் வரையிலான பணியிட மாற்றத்துக்கான உத்தரவை டிஜிபி பிறப்பிப்பார். காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான பணியிட மாற்றத்தை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE