யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கழுமங்குடாவைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பைபர் நாட்டுப் படகில் வாஞ்சிநாதன், மகேஷ், ரஞ்சித் குமார் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, நீரோட்டம் காரணமாக அந்தப் படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிட்டது.

கடந்த மே 16 அன்று படகுடன் மூன்று மீனவர்ளும் யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் கரை ஒதுங்கினர். பின்னர் படகை பறிமுதல் செய்த இலங்கை போலீஸார் 3 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) 3 தமிழக மீனவர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE