பெரியார் பிறந்தநாளில் அந்தியூரில் கூடிய சாதிமறுப்புத் திருமண தம்பதிகள்!

By கா.சு.வேலாயுதன்

பெரியார் பிறந்தநாளில், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த 50-க்கும் மேற்பட்ட தம்பதிகள் ஒன்று கூடி, தங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

அந்தியூர், தவுட்டுப்பாளையம் ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் மண்டபத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இன்று பாராட்டு விழா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, திக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 45 தம்பதிகள், 7 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி, சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தி, சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியர் பல்வேறு சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு முன்னேறிட அவர்களுக்கு தமிழக அரசு கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், மத்திய சட்டக் கமிஷன் பரிந்துரையை ஏற்று, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை முன்மாதிரியாக தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE