’போட்டி பரிட்சையே கூடாது!’என்ற பண்டிதர் அயோத்திதாசர்

By காமதேனு டீம்

‘நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை நடத்தப்படும்’ என்றும் அறிவித்து, சட்ட மசோதாவை திமுக தலைமையிலான தமிழக அரசு நேற்று (செப். 13) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

’தமிழன்’ இதழின் ஒரு பிரதி

இதையடுத்து, பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், தேர்வுமுறையை மட்டும் ஒரே மாதிரி நடத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது’ என்கிற கருத்து ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. மறுபுறும், போட்டித் தேர்வுகள் இன்றி தகுதியானவர்களை கண்டறிய முடியாது என்கிற வாதமும் வலுக்கிறது.

இந்நிலையில், 110 ஆண்டுகளுக்கு முன்பே தனது, ’தமிழன்’ இதழில் பண்டிதர் அயோத்திதாசர், ‘போட்டி பரிட்சையே கூடாது’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை, சமூக ஆர்வலர் ராவணன் அம்பேத்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதிலிருந்து:

தற்காலத்தில் நீட், தகுதி, திறமை குறித்த உரையாடல்கள் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கும் சூழலில் பண்டிதர் அயோத்திதாசர், தமிழன் இதழ் 4:39 மார்ச் 8, 1911-ல் எழுதிய இந்தப் பதிவை பகிர்கிறேன்.

‘போட்டி பரிட்சையே கூடாது’

போட்டி பரிட்சைகள் என்பது யாதெனில், ராஜாங்க உத்தியோக வகுப்புகளில் அந்தந்த உத்தியோகத்திற்குத் தக்க போட்டிப் பரிட்சை வைத்து அதில் முன்னேறியவர்களுக்கு உத்தியோகம் அளிக்க வேண்டும் என்னும் ஓர் ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்பதாய் சிலர் வெளிதோன்றி வாதிட்டு வருகின்றார்கள்.

இத்தகையப் போட்டி பரிட்சையில் பலசாதியோர்களும் ராஜாங்க உத்தியோகத்தில் சேராமல் ஒருசாதியோரே ராஜாங்க உத்தியோகத்தில் சேர்ந்து சுகமடையும்படியான ஏதுவைத் தரும். அதாவது, இத்தேசத்துள் ஒருசாதி வகுப்பினரன்றி பலசாதிகள் நிறைந்திருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் கல்வியின் விருத்தியிலும், கைத்தொழில் விருத்தியிலும், விவசாய விருத்தியிலும் நோக்கமுடையவர்களாய் உள்ளதுமன்றி கல்வியில் கொடுத்த பாடத்தை இரவும் பகலும் உருப்போட்டு ஒப்பிக்கும் வழக்கம் சகல சாதியோரிடத்திலும் கிடையாது. பெரும்பாலும் அத்தகைய உருப்போடும் வழக்கம், இத்தேச செல்வந்தர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கிடையாது. சிலசாதியோர்களுக்கு மட்டிலுமுண்டு.

அவர்களே போட்டிப் பரிட்சையில் முன்னேறுவார்கள். அவர்களே சகல ராஜாங்க உத்தியோகங்களிலும் நிறைந்துவிடுவார்கள். அத்தகைய நிறைவால் அவர்கள் கூட்டத்தோரே சகல சுகமும் பெற்று வாழ்வதுடன் மற்ற சாதியோர்கள் யாவரும் சகல விஷய சுகங்களுங்கெட்டு பாழடைந்துபோவார்கள்.

சைனா, ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா முதலிய தேசங்களில் ஏகசாதியோர்களாய் இருக்கின்றபடியால் அந்தந்த டிபார்ட்மெண்டில் வைக்கும் போட்டிப் பரிட்சைகளில் முன்னேறுவோரும் பின்னடைவோரும் ஏகசாதியினராய் இருக்கின்றபடியால் தேறினோரும் தேறாதோரும் அவர்களைச் சார்ந்தவர்களும் சமரச சுகவாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்கள்.

இந்திய தேசத்தில் அத்தகைய ஏகசாதிகூட்டமில்லா பலசாதி கூட்டங்கள் நிறைந்து விட்டபடியால், ஒருசாதியார் போட்டிப் பரிட்சையில் முன்னேறி விடுவார்களாயின் மற்றய சகலசாதியோரும் கெடுவார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆதலின், நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் பலசாதியோர் நிறைந்துள்ள இத்தேசத்தில் போட்டி பரிட்சை வையாது அவரவர்கள் யோக்கியதையையும், அந்தஸ்தையும், உழைப்பையும், ராஜவிசுவாசத்தையும் கண்டு அந்தந்த உத்தியோகங்களைக் கொடுத்துக் கொண்டுவருவதுடன் அந்தந்த டிப்பார்ட்டுமெண்டுகளாகும் ஒவ்வொரு வகுப்பிலும் பௌத்தர்கள் இத்தனைபேர், இந்துக்கள் இத்தனைபேர், மகமதியர் இத்தனைபேர், கிறீஸ்தவர்கள் இத்தனைபேர் எனக் குறித்து விடுவார்களாயின் இத்தேச சகலகுடிகளும் சுகம் பெற்று ராஜவிசுவாசத்திலும் நிலைத்து வாழ்வார்கள்.

அங்ஙனமின்றி கருணை தங்கிய ராஜாங்கத்தார் போட்டிப் பரிட்சைக் கிடங்கொடுத்து ஒருசாதிகளே முன்னேறி சகல டிப்பார்ட்மெண்டு உத்தியோகங்களிலும் நிறைந்துவிட்டப் பின்பு அவர்களைக் குறைப்பதற்கு வழிதேடுவதாயின் அவர்களே தீட்டிய மரத்திற் கூர் பார்ப்பவர்களாகவும் உண்டவீட்டை ரண்டகஞ் செய்பவர்களாகவுமான சத்துருக்களாயினுமாகுவர். ஆதலின் பலசாதிகள் நிறைந்துள்ள இத்தேசத்தில் போட்டி பரிட்சையை வையாது சகலசாதியோரும் சுகம்பெற்று வாழும் அவரவர்கள் அந்தஸ்திற்கும், யோக்கியதைக்குத் தக்கவாறு தெரிந்தெடுத்து உத்தியோகமளிப்பதே சிறப்பாதலின் போட்டிப் பரிட்சையென்னும் கருத்தைப் புறந்தள்ளி இராஜாங்கத்தார் பிரியம்போல் நியமித்தல் என்னும் கருத்தை நிலைக்கச் செய்ய வேண்டுகிறோம்.”

அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வைக் குறித்த பதிவென்றாலும், இதை இப்போது நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். பண்டிதர் மிகத் துல்லியமாக இந்தச் சிக்கலை விளக்கி, அவ்வகை தேர்வுகள் ஏன் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறார். அதிலும் இந்த ‘உருப் போட்டு ஒப்பிக்கும் வழக்கம்’ எல்லா மக்களிடமும் கிடையாது ஒரு வகுப்பாரிடம் மட்டுமே உண்டு. எனவே, இதை அனுமதிக்க முடியாது என்று அவர் சொல்லும் கருத்து இந்த காலத்துக்கும் பொருந்துக் கூடியதாகவே இருக்கிறது. ஏனெனில், ‘உருப் போட்டு ஒப்பிக்க’ வேண்டுமென்றாலும் ஒரு சமூகச் சூழல் தேவைப்படும். பொருளாதார சாதிய சுரண்டல்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு சுதந்திர அகப்புறவெளி... அந்த வெளி கிட்டும் வரைக்கும் இப்படிப்பட்ட போட்டி தேர்வுகளை மொத்தமாகத் தடை செய்து விட வேண்டியதுதான், ஒரு மக்கள் நல அரசின் பணியாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE