ஈரோடு மலை கிராமங்களில் வீதிக்கு வீதி வகுப்பறைகள்

By காமதேனு டீம்

ஈரோடு மாவட்டத்தில், 10 பழங்குடி கிராமங்களில் வீதிக்கு வீதி வகுப்பறைகள் என்ற படிப்பறிவு திட்டம் சர்வதேச எழுத்தறிவு தினத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மலை கிராம குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் கல்விச் செயல்பாடுகளில் தொடர்பில்லாமல் உள்ளனர். கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கிராமங்களில் உள்ள வீதிகளிலேயே படித்த உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு மாலை நேரங்களில் மலை கிராமங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க, சத்தியமங்கலத்தில் உள்ள ‘சுடர்’ தன்னார்வ அமைப்பினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். அதுவே இந்த ‘வீதிக்கு வீதி வகுப்பறை திட்டம்’ .

மாணவர்களுக்கு நூல்கள் வழங்கல்

இந்த வீதி வகுப்பறைகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, சுகாதாரக் கல்வி, விளையாட்டு, இயற்கை வேளாண்மை குறித்தும் கற்றுத் தரப்படுகிறது .

‘‘முதல் கட்டமாக பர்கூர் மலை கொங்காடை, அக்னிபாவி, கடம்பூர் உள்ளிட்ட 10 பழங்குடி கிராமங்களில் தொடங்கப்படும் இந்த முயற்சி, படிப்படியாக பல கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்’’ என்றார் இந்த அமைப்பின் தலைவர் ‘சுடர்’ நடராஜன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE