இது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி!

By கே.எஸ்.கிருத்திக்

கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், அப்பதவியில் இருந்து விலகி கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருப்பதால், இணையத்திலும் தீவிரமாக களமாடி வருகிறார் அவர். குறிப்பாக, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பதவியில் இருந்து விலகி, இன்று தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் அரசியல் பதிவுகளுக்கு பதிலடி கொடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

"விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால், திமுக ஆட்சி முடிவுக்கு வர விநாயகரே காரணமாக இருப்பார்" என்று சமீபத்தில் 'தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி'யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுத்த சசிகாந்த் செந்தில், "வீடியோவை மடைமாற்ற விநாயகரா? நடக்கட்டும்... நடக்கட்டும்... அடுத்த நாடகம் தொடங்கட்டும்" என்று விமர்சித்திருந்தார். அந்தக் கருத்துக்குக் கீழே ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

இதைப் பார்த்த சிவகங்கை எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப.சிதம்பரம், "சசிகாந்த் செந்தில் யார்? அவருக்கு ஒருங்கிணைப்பாளர் என்று ஏதேனும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா?" என்று ட்விட்டரிலேயே கேள்வி எழுப்பினார். ஏற்கெனவே கோஷ்டி அரசியலுக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் இருபிரிவாக பிரிந்து இணையத்தில் மோதிக்கொண்டது.

சசிகாந்த் செந்தில்

கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவும் தன் பங்குக்கு கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து, முகநூலில் பதிவொன்றை வெளியிட்டார். அதில், ‘கர்நாடக மாநிலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரத்துடன் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர் சசிகாந்த் செந்தில். அவர் பணியிலிருந்த காலத்தில் நேர்மையாக, திறமையாக, ஆற்றல்மிக்கவராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக செயல்பட்டு பெருமை பெற்றவர். அத்தகைய மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கை மீது பற்று கொண்டு, குறிப்பாக, காந்தி, நேரு கருத்தியலில் ஈர்க்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.எஸ் வழிவந்த வகுப்புவாத கருத்துகளைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தவர். தலைவர் ராகுல்காந்தியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டுமென்று கருதியவர். ஓர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரராக, கொள்கைவாதியாக, காங்கிரஸில் இணைந்த அவரை, தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கிற லட்சோப லட்சம் தொண்டர்களும் மனப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். தமிழக மக்களும் இப்படிப்பட்ட அளப்பரிய தியாகத்தைச் செய்து பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிற சசிகாந்த் செந்தில் அவர்களை மனதாரப் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.

அவருக்குத் தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. தொலைக்காட்சி விவாதங்களில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைப்பதன் மூலமாக காங்கிரஸின் கொள்கை முரசாகத் திகழ்ந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பொக்கிஷமாக சசிகாந்த் செந்தில் விளங்குகிறார். இத்தகைய வெற்றிக்கு காரணம், அவரிடம் எதிர்மறை சிந்தனை இல்லாததே ஆகும்.

சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் கலந்து பேசி தமிழக காங்கிரஸில் துணை அமைப்புகளாக இருக்கிற சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துவதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பு வழங்கியதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர் என்று அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்ன குற்றம் இருக்கிறது? காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் இல்லாத பொறுப்பாளர், பார்வையாளர் போன்ற பதவிகள் வழங்குவதைப்போல ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பணிகளை செய்வதற்காக இத்தகைய பொறுப்புகள் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைவிட மிகப்பெரிய பொறுப்புகளை சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வழங்குகிற காலம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்கிற அவரது உண்மையான கொள்கைப் பற்றின் காரணமாகவும், அடக்கமான செயல்பாட்டினாலும் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் நன்மதிப்பையும், அன்பையும், ஆதரவையும் அவர் மிகப்பெரிய அளவில் பெற்று வருகிறார் என்பதை அறியும்போது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓர் உண்மையான ஊழியருக்கு உயர்வு கிடைக்கும்போது மகிழ்ச்சி அடைபவர்கள்தான் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியும்.

ஒரு சிறிய உயர்வு ஏற்படுகிறபோது அதைக்கூட தாங்கிக் கொள்ளாமல், சகித்துக் கொள்ளாமல் கருத்துகளைக் கூறுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். காங்கிரஸ் கட்சியில் இத்தகைய போக்கு இருப்பது நல்லதல்ல. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது. இத்தகைய உட்பகை அரசியலைத் தவிர்க்க வேண்டுமென்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். அதுவே நமது உயர்வுக்கு வழிவகுக்கும். அந்தவகையில், தகுதியும் ஆற்றலுமிக்க சசிகாந்த் செந்தில் அவர்கள் தற்போது பெற்றுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவியை விட, எதிர்காலத்தில் தமிழக காங்கிரஸின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வருவார் என்று எனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் உறுதியாகக் கூறுகிறேன். சசிகாந்த் செந்தில் அவர்களின் பணி தொய்வின்றி தொடர அவரை மனதார வாழ்த்துகிறேன்’ என்று பொரிந்து தள்ளியிருந்தார் கோபண்ணா.

இந்தக் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தன்னுடைய பதிவில் கோபண்ணா எந்த இடத்திலும் கார்த்தி சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், கட்சி வளர்ச்சிக்காக சொட்டு வியர்வைகூட சிந்தாமல் சொகுசான பதவிகளை மட்டுமே அனுபவிக்கும் சிவகங்கை சின்ன மைனரின் திமிர்ப் பேச்சை கண்டிக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கார்த்தியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE