முன்னதாக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் நேற்று (ஆக. 09) வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிந்துள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், கடந்த அதிமுக அரசின் தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய சரிவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இத்தகைய பொருளாதார சூழ்நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை அறிக்கை குறித்து, இன்று (ஆக. 10) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.