தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக 8 மாவட்டங்களில் இன்று (ஜூன் 7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். 9 முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் 10-ம் தேதி வரைசூறாவளிக் காற்று மணிக்கு 35முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE