கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை

By KU BUREAU

திருநெல்வேலி: கனமழை எச்சரிக்கையை அடுத்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி இன்று (16-ம் தேதி) முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 55 கி.மீ. வரையும் வீசக்கூடும்.

மேலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE