நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை நீடிப்பு

By KU BUREAU

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் கோடை மழை நீடித்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அணைப் பகுதிகள் மற்றும் பிற இடங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

இரு மாவட்டங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 2, மணிமுத்தாறு- 2.40, கன்னடியன் அணைக்கட்டு- 7.8, கொடுமுடியாறு- 56, நம்பியாறு- 12, மாஞ்சோலை- 20, காக்காச்சி- 7, நாலுமுக்கு- 15, ஊத்து- 10, அம்பாசமுத்திரம்- 6.8, சேரன்மகாதேவி- 5, நாங்குநேரி- 3.40, ராதாபுரம்- 35, களக்காடு- 24.6, மூலைக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை- தலா 30, திருநெல்வேலி- 16, கடனா- 1, ராமாநதி- 24, கருப்பாநதி- 2.50, குண்டாறு- 2.80, அடவிநயினார்- 25, ஆய்குடி- 4, செங்கோட்டை, தென்காசி- தலா 9, சங்கரன்கோவில்- 2, சிவகிரி- 3.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 51.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 42.80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.98 அடியாக இருந்தது. அணைக்கு 48கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 245 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா நீர்மட்டம் 25.60 அடியாக இருந்தது.

அணைக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராம நதி அணை நீர்மட்டம் 37.75 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக வந்து கொண்டிருந்த 10 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டிருந்தது. தொடர் மழையால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஓரளவுக்கு தண்ணீர் கொட்டியது.

தென்காசி மாவட்டத்துக்கு வானிலை மையம் கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் பிரதான அருவியில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் மழை ஓய்ந்திருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திருநெல்வேலி, பாளையங் கோட்டை பகுதிகளில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வரையில் மழை பெய்யவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE