ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு சட்டவிரோதம் என எப்படி கூறலாம்? - உயர் நீதிமன்றம் கேள்வி

By KU BUREAU

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சட்டவிரோதம் என எப்படி கூற முடியும் என்று தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகன் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கும் சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி கேசவ விநாயகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு விசாரணைக்கு ஆஜராவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இந்த விசாரணை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதால், சட்டவிரோதமான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கை சட்டவிரோதமானது என எப்படி கூற முடியும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டியதுதானே, தேர்தல் பறக்கும் படையினரால் இந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில், பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE