தனி மனிதனை அவமதிப்பதாக எண்ணி தமிழினத்தை பாஜக அவமதித்துள்ளது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: ‘வி.கே.பாண்டியன் என்ற ஒரு தனி மனிதனை அவமதிப்பதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு தமிழன்‌ ஒடிசாவில் முதன்மையான இடத்துக்கு சென்றுவிடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது. தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி - சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும், அதை மற்றொருவர் கேலி செய்வதைப் போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

உலகுக்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுத்த முதல் இனம் தமிழினம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பாஜகவுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக‌, எதற்காக வி.கே.பாண்டியனைக் கண்டு அஞ்சுகிறது?

கடந்த ஆண்டு இதே நாளில், இதே வி.கே.பாண்டியன்தான் ஒடிசா ரயில் விபத்தின்போது படுகாயமடைந்த தமிழர்களுக்கு தேவையான ரத்தமும், உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்களுக்கும், இருக்கும் மண்ணை சேர்ந்த மக்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

ஒரு மனிதனை இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாகத்தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE