இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டுப் போட்டி... பதக்க வேட்டையைத் துவக்குமா இந்தியா?

By காமதேனு

19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டி அக்டோபர் 8்-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

எல்இடி திரை

ஆசிய நாடுகளுக்கிடையே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடர், சீனாவில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது.

ஹாங்சோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கும் போட்டி அக்.8-ம் தேதி நிறைவடைகிறது. தொடக்க விழாவில் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போட்டியை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா என 45 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் 40 வகையான விளையாட்டுகளில், 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகள் ஹாங்சோ நகரில் 56 இடங்களில் நடத்தப்படும். போட்டியில் சுமார் 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களைத் தவிர ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் சீனா சென்றுள்ளனர்.

போட்டித் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று தான் தொடங்குகிறது என்றாலும் கால்பந்து, மகளிர் கிரிக்கெட், வாலிபால், படகு போட்டி உள்பட பல்வேறு குழு போட்டிகள் ஏற்கெனவே செப்.19 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்திய வீரர்கள்

இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 655 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரம்மாண்ட அணி பதக்க வேட்டையில் களமிறங்குகிறது. கடந்த 18 போட்டிகளில் இந்தியா 2018-ல் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றுள்ளது. அந்த சாதனையை இந்தியா இம்முறை முறியடித்து, பதக்க வேட்டையில் முதல் முறையாக சதம் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக கம்போடிய மன்னர் நரோடோம் சிஹாமணி, சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால், நேபாள பிரதமர் புஷ்ப கமல், தென் கொரியா பிரதமர் ஹான் டக் சோ உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

சீனாவின் கலாச்சார பெருமை, வரலாற்று சின்னங்கள், இயற்கை வளங்கள், தனித்துவமான இசை, நடனம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு, முப்பரிமாணம், மெய்நிகர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்பட உள்ள கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்த உள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான சுடரை ஏற்றும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் ‘டிஜிட்டல்’ முறையில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பூலோக சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் ஹாங்சோ நகரில் உள்ள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைய அரங்கில் தான் தொடக்க விழா நடைபெற உள்ளது.

2018-ல் திறக்கப்பட்ட இந்த அரங்கில் திறந்து மூடும் வகையிலான பிரம்மாண்ட கூரை, வட்ட வடிவிலான எல்இடி திரை, 80 ஆயிரம் இருக்கைகள் உள்பட அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்கவிழா நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE