ஆசியக்கோப்பையை கைப்பற்றியது இந்தியா... இலங்கையை வாரி சுருட்டி வீழ்த்தியது!

By காமதேனு

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை சுருட்டினார்.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமானது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா அபாரமாக பந்து வீசி குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் பின்னர் முகமது சிராஜ் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சிராஜ் பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன்பின்னர் சிராஜ் மெண்டிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் இஸான் கிஷன் களமிறங்கினர். இதில் கில் 27 ரன்களையும், கிஷன் 23 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE