அடுத்த அதிர்ச்சி... இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து! கேள்விக்குறியான உலக சாம்பியன் போட்டி!?

By காமதேனு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படவில்லை என்பதை காரணம் காட்டி உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும், இல்லை என்றால் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என்று கடந்த மே 30ம் தேதி உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. மே 7ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், அந்த தேர்தலுக்கான அறிவிப்பு சட்டப்படி செல்லாது என அறிவித்தது.

இதனால், பலமுறை தேர்தல் தள்ளிப்போன நிலையில், மாநிலங்களின் கூட்டமைப்புகள் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலக மல்யுத்த கூட்டமைப்பு அளித்திருந்த கெடு முடிவடைந்து 3 மாதங்கள் கடந்ததையடுத்து, இந்தியாவுக்கான உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய மல்யுத்த வீரர்களால், செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்தியாவின் சின்னம் அணிந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜக எம்.பி.யும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது, அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE