ஜெய்ஸ்வால் - கில் அபார ஆட்டம்... மேற்கிந்திய தீவுகளை அதிரடியாக வீழ்த்தியது இந்தியா!

By காமதேனு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் - கில் கூட்டணி சிறப்பாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கெனவே டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

அதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றது. ஆனால் 3வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வென்றது.

ஜெய்ஸ்வால் - சுப்மன் கில்

மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி, இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய ஹெட்மேயர் 39 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். சாய் ஹோப் 45 ரன்களை விளாசினார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கில் - ஜெய்ஸ்வால் கூட்டணி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆரம்பம் முதலே இருவரும் தெறிக்கவிட்டு ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தபட்சம் 10 ரன்களை சேர்த்து வந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் - ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 165 ரன்களை சேர்த்தது. இதனால், சர்வதேச டி-20 போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு இந்திய அணி சார்பில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். கில் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜெய்ஸ்வால் 84 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் விளாசும் முதல் அரைசதம் இதுவாகும். இதன் மூலம், வெறும் 17 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-2 என சமன் செய்தது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ளது. தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் களமிறங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE