சிறப்பாக விளையாட ஐபிஎல் தான் காரணம்... தெளிவுபடுத்தினார் தென் ஆப்ரிக்கா கேப்டன்!

By காமதேனு

உலகக் கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் போட்டிகள் தான் காரணம் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்திய அந்த அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா 111 ரன்கள் அடித்தார். இதையடுத்து வெற்றிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசினார்.

"இது எங்களுக்கு மற்றொரு நல்ல நாளாக அமைந்துள்ளது. இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடைசிவரை சென்று இருந்தாலும் இறுதியில் இது நல்ல நாளாகவே அமைந்தது.

எங்கள் அணியின் கடைசி கட்ட ஓவர்கள் (டெத் பவுலிங்) வீசுவதில் பிரச்சினை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியின் பவுலர்கள் அனைவருமே டெத் ஓவர்களில் பந்துவீச கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த போட்டியில் குவிண்டன் டி காக் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று கிளாசன் விளையாடிய விதமும் அருமையாக இருந்தது.

எய்டன் மார்க்ரம்

எங்கள் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு மாதிரி விளையாடக் கூடியவர்கள். இருந்தாலும் ஒரு அணியாக நாம் அதிலிருந்து பாசிட்டிவான விசயங்களை எடுத்து வெற்றி பெறுவதுதான் அவசியம். எங்கள் அணி உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதற்கு காரணம் ஐபிஎல் போட்டிகள் தான். இங்குள்ள ஆடுகளங்களை நன்கு அறிந்த அவர்கள் அந்த அனுபவத்தை ஆட்டத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த வெற்றிகள் தொடரும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE