உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுள் ஒருவர் ரபேல் நடால். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று தரவரிசையில் முதலிடத்திலும் இருந்தவர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் உள்ளார். ஜூன் மாதம் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில், 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ரபேல் நடால் கலந்துகொள்ள உள்ளதாக, அத்தொடரின் இயக்குநர் கிரேய்க் டைலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நடாலை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஆஸ்திரேலிய தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார். அதேபோல், காயம் காரணமாக ஓய்வில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸூம் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடால் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப உள்ளது டென்னிஸ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.