“என் உத்வேகம் நொறுங்கியது!” - வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பு

By KU BUREAU

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மல்யுத்தம் என்னிடம் போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என் உத்வேகம் அனைத்தும் நொறுங்கிவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 - 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் நொறுங்கச் செய்தது. இப்போது, வினேஷ் போகத்தின் ஓய்வு அறிவிப்பும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கின் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதிய இந்தியாவின் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

பின்னர், இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத்.இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக, காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது.

இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE