கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரம்: அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

By KU BUREAU

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. பெனல்டி ஷூட்-அவுட்டின்போது இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

பாரிஸ் நகரில் நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்தியா, கிரேட் பிரிட்டன் அணிகள் மோதின. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

கால் இறுதி என்பதால் ஆட்டத்தில் மிகவும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். பெனல்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் ஹர்மன்பிரீத். இதைத் தொடர்ந்து கிரேட் பிரிட்டன் வீரர் லீ மார்ட்டன் ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சம நிலையை ஏற்படுத்தினார்.

இதனிடையே இந்திய வீரர் அமித் ரோஹிதாஸுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்ட இறுதி வரை வேறு கோல்கள் விழாததால் 1-1 என்ற நிலையே நீடித்தது.

இதைத் தொடர்ந்து பெனல்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்திய வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த 4 வாய்ப்புகளையும் கோலாக மாற்றினர். ஆனால் கிரேட் பிரிட்டன் வீரர்கள் 2 வாய்ப்பை கோலாக மாற்றத் தவறினர். இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக 2 முறை பந்துகளைத் தடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. கடந்த 2021-ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அரை இறுதி வரை இந்திய அணி முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE