திண்டுக்கல்லில் மாநில அளவிலான பூப்பந்து போட்டி: கோப்பை வென்ற மதுரை, சென்னை அணிகள்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான பூப்பந்து போட்டியில், மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி அணி, சென்னை எஸ்.ஆர்.எம்., அணி ஆகியவை முதலிடம் பெற்று கோப்பையை வென்றன.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்ட பூப்பந்து சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பூப்பந்து போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரியில் உள்ள செயற்கை புல்தரை மைதானத்தில் நடைபெற்றது. மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்தோர் வீரர்களுக்கான ஏழு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. ஜூலை 26 ல் போட்டிகள் துவங்கி
22 மைதானங்களில் போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1800 வீரர்கள் கலந்துகொண்டு, 250 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடினர். இறுதிப்போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் பள்ளி அணி முதலிடத்தை பெற்றது. மாணவர்கள் பிரிவில் வத்திராயிருப்பு இந்து பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது.

ஆண்கள் ஐவர் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணி கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை சென்னை லயோலா கல்லூரி அணி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரி டிரஸ்டி சூர்யாரகுராம், சென்னை எஸ்.ஆர்.எம்., அணிக்கு கோப்பையை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE