தொடர்ந்து 5 போட்டிகளில் சதம்: தமிழக கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை!

By காமதேனு

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்து தமிழக வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணியின் வீரர் நாராயண் அபாரமாக ஆடி வருகிறார். இவர் இன்றைய போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதமடித்துள்ளார். இதன் மூலமாக விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 114 பந்துகளில் ஜெகதீசன் 19 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் இரட்டை சதமடித்தார்.

லிஸ்ட் ஏ எனப்படும் முதல்தர கிரிக்கெட்டில் (இதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டும் அடங்கும்) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கரா 2015ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்தார். அதேபோல விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக வீரரான தேவ்தத் படிக்கல்லும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரரான பீட்டர்சனும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெகதீசன் இன்று படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் ஆந்திராவிற்கு எதிரான போட்டியில் ஜெகதீசன் அபாரமாக ஆடி 114 ரன்களை குவித்தார். அதன்பின்னர் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் 107 ரன்களை குவித்த ஜெகதீசன், கோவாவுக்கு எதிராக 140 பந்தில் 168 ரன்களை குவித்து இந்திய அணியின் அபார வெற்றிக்கு உதவினார். அடுத்ததாக ஹரியானாவுக்கு எதிராக போட்டியிலும் ஜெகதீசன் 128 ரன்களை குவித்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜெகதீசன், இம்முறை சென்னை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE