ஆஸ்திரேலிய அணியுடன் நேற்று நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
நேற்றிரவு மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ராகுல் 35 பந்துகளில் 55 ரன்களும், சூரியகுமார் 25 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசியதால் இந்தியா 200 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்குடன் ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் பிஞ்ச் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேமரூன் கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் குவித்து மிரட்டினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் கணிசமாக ரன்களை குவித்த காரணத்தால் அந்த அணியின் வெற்றி எளிதானது. மேத்யூ வேட் 45 ரன்களும், சுமித் 35 ரன்களும் எடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் மேத்யூ வேட், டிம் டேவிட் ஜோடி போட்டு இந்தியாவின் நம்பிக்கையை சிதைத்தனர். இறுதியாக 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இந்தியாவின் தரப்பில் இந்த முறையும் மோசமாக சொதப்பியது பந்துவீச்சுதான். புவனேஷ்குமார் 4 ஓவர்களை வீசி 52 ரன்களை வாரி வழங்கினார். யுஸ்வேந்திர சாஹல் 3.2 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்தார். அதுபோல உமேஷ் யாதவின் பந்துவீச்சும் எடுபடவில்லை. பீல்டிங்கிலும் இந்தியா வழக்கம்போல இந்த முறையும் சொதப்பியது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.