மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்க பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதனையொட்டி 11-ம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் 12-ம் நாளான இன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் புறப்பட்டனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு வெள்ளி சிம்ம வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மூலக்கரையிலுள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது மதுரையிலிருந்து புறப்பட்ட மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரரை சந்திப்பு மண்டபத்தில் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமிகளுக்கு சந்திப்பு மண்டபத்திலிருந்து கோயில்வரையுள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலுக்குள் ஆறுகால் மண்டபத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர் பின்னர் மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மதியம் 1.25 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
» தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
» ராமேசுவரம் கோயிலில் மயங்கி விழுந்து வட மாநில பக்தர் உயிரிழப்பு
இன்று இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி அம்பாரி வாகனத்திலும், தெய்வானை அம்மன் ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருள்வர். பின்னர் 16 கால் மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மீனாட்சி சுந்தரேசுவரர் வழியனுப்புதல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 13-ம் நாளான (மார்ச் 19) தேரோட்டம் காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது.
அன்றிரவு 8 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 14-ம் நாளான மார்ச் 20-ம் தேதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
ஒரு மணி நேர தாமதம்: திருக்கல்யாணம் மதியம் 12:15 மணிக்கு தொடங்கி 12:45 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண மேடைக்கு வர தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யாதால் தாமதமானது. இதனால் மதியம் 1.25 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முகூர்த்த நேரத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தின்போது திருமணமான பெண்கள் தங்களது புதுத்தாலி அணிந்து கொள்வர்.
ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக திருக்கல்யாணம் நடைபெற்றதால் பெண்கள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா கூறுகையில், “திருக்கல்யாண முகூர்த்த நேரம் 12.45 மணி முடியப்போகிறதோ என சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது மதியம். 1.35 மணிவரை முகூர்த்த நேரம் இருப்பதாக கூறினர். அதனால் அந்த நேரத்திற்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது,” என்றார்.